
உத்தரபிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பயங்கர சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோஸா போலீஸ் சரகத்துக்குட்பட்ட மான்பூர் சச்சாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ் குமார் (வயது 36) என்பவர் தனது நான்கு குழந்தைகள் ஸ்மிருதி (12), கீர்த்தி (9), பிரகதி (7), மற்றும் ரிஷப் (5) ஆகியோரை கழுத்தை அறுத்து கொலை செய்து, பின்னர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவுக்கே நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ராஜீவ் குமாரின் தந்தை கதவை உடைத்துப் பார்த்தபோது, ராஜீவ் மற்றும் 4 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். கடந்த ஆண்டு நடந்த விபத்தில் சிக்கிய ராஜீவ், அதன்பிறகு மனநிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி தகராறு செய்ததால் அவரது மனைவி பிரிந்து சென்றதாகவும் போலீசார் கூறினர்.இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.