டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இருப்பினும், ஆட்டத்திற்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆசியக் கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கும் வழக்கத்தைத் தவிர்த்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றத்தின் எதிரொலியாக இந்த ‘நோ-ஹேண்ட்ஷேக்’ (No-handshake) கொள்கை கடைபிடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

நேற்றைய போட்டியின் தொடக்கத்தில், டாஸ் போடப்பட்ட போதே இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா ஆகியோரிடையே வழக்கமான கைகுலுக்கல் தவிர்க்கப்பட்டது.

போட்டி முடிந்து இந்திய அணி வெற்றியைத் தழுவிய பிறகு, பாகிஸ்தான் நட்சத்திர வீரர் ஷஹீன் அப்ரீதி மற்றும் உஸ்மான் தாரிக் ஆகியோர் மைதானத்தின் அருகே இந்திய வீரர்களுக்கு கைகுலுக்கக் காத்திருந்தனர். ஆனால், இந்திய வீரர்கள் எவ்வித சலனமுமின்றி, அவர்களைக் கடந்து நேராக உடைமாற்றும் அறைக்குச் சென்றனர். அப்ரீதி மற்றும் தாரிக் ஏமாற்றத்துடன் திகைத்து நின்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மறுபுறம், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் தனது விசித்திரமான பந்துவீச்சு முறையினால்  கேலிக்குள்ளாகி வருகிறார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது, ஸ்காட்லாந்து வீரர் ஒருவர் தாரிக்கின் பந்துவீச்சு முறையைப் போலவே செய்து காட்டி கிண்டல் செய்துள்ளார். இது அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

விளையாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டது என ஒரு தரப்பினரும், தேச நலனே முக்கியம் என மற்றொரு தரப்பினரும் இந்த கைகுலுக்கல் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.