உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் வசிக்கும் விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் தனது 14 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். டிபன் சர்வீஸில் வேலை செய்து வந்த இவருக்கு, அதே சொசைட்டியில் வசிக்கும் ரியா என்ற பெண் மற்றும் அவரது கணவர் உதித் மூலம் நடந்த கொடூரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, ஏப்ரல் 1, 2024 அன்று உதித் மற்றும் அவரது மனைவி ரியா அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது மகன் பள்ளியில் இருந்த நிலையில், தேநீரில் போதைப் பொருள் கலந்து அவரை மயக்கமடையச் செய்து, உதித் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக கூறப்படுகிறது. ரியா இந்த செயலின் போது ஆதரவளித்ததோடு, வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவைக் காட்டி தொடர்ந்து மிரட்டி, பணம் மற்றும் நகைகளை பறித்ததுடன், மகனை கொன்றுவிடுவதாகவும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, ஜனவரி 10, 2025 அன்று வீடியோவை வைரலாக்குவதாக மிரட்டி, உதித் ரூ.10 லட்சம் கோரியுள்ளார். பயத்தில் பாதிக்கப்பட்ட பெண் ரூ.9 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கில் அனுப்பியுள்ளார். அதற்கு பின் தொடர்ந்து மிரட்டல்களுக்கு உள்ளான அவர், மொத்தமாக ரூ.24 லட்சம் மற்றும் 25 கிராம் தங்க நகைகளை இழந்துள்ளார். வீடியோவை நீக்கச் சொன்னபோது, உதித் அவரது மகனைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதால், காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க முடிவெடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், காசியாபாத் போலீசார் உதித் மற்றும் அவரது மனைவி ரியா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நகரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. போலீசார் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.