மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு சட்டக் கல்லூரி வளாகத்தில், 21 வயதான ஒரு மாணவிக்கு எதிராக நடந்ததாக கூறப்படும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், திரிணாமுல் சத்ரா பரிஷத் (TMCP) முன்னாள் நிர்வாகி மோனோஜித் மிஸ்ரா மற்றும் தற்போது பயிலும் மாணவர்கள் அகமது, முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், ஜூன் 26ஆம் தேதி இரவு 7:30 மணி முதல் 10:50 மணி வரை நடந்ததாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியிடம் மோனோஜித் மிஸ்ரா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் மோனோஜத் மிஸ்ரா மாணவியை ஒரு அறையில் பூட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். காலில் விழுந்து கெஞ்சியும் அவர் மாணவியை விடவில்லை. சிறிது நேரம் கழித்து மாணவர்களான அகமது, முகர்ஜி ஆகியோரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதனை வீடியோவாக பதிவு செய்து சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என மிரட்டி மாணவியை ஹாக்கி மட்டையால் தாக்கியுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, வியாழக்கிழமை மாலை மிஸ்ரா மற்றும் அகமதை கைது செய்தனர்.

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மால்வியா, “மேற்கு வங்கம் இன்று பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவிட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கமான செய்தியாகி விட்டது. இது வெறும் குற்றமல்ல; அதிகாரபூர்வ அமைப்புகள் மூடிமறைக்கும் செயல்” எனக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “இந்தக் குற்றங்களை அரசியல் பிணையம் மூடிக்கொள்ள அனுமதிக்க முடியாது. நீதிக்காக பாஜக உறுதியாக நிற்கும்” என அவர் கூறினார்.  இந்த சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.