
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் ஆகாஷ் அகிர்வாரா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு மணமகன் உட்பட 6 பேர் மணமகள் வீட்டிற்கு காரில் சென்றனர். இந்த கார் படகான் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று திடீரென வேகமாக காரின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரின் கண்ணாடியை உடைத்து 2 பேரை மீட்டனர். ஆனால் மற்றவர்களை மீட்க முடியவில்லை. காயமடைந்த இரண்டு பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கோர விபத்தில் கார் ஓட்டுநர், மணமகன், அவருடைய சகோதரர், 4 வயது குழந்தை உட்பட 4 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் திருமணம் நடைபெற இருந்த சமயத்தில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.