
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புளியந்துறை கிராமத்தை சேர்ந்தவர் வில்லு (70). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தனது மகள் அருள்ஜோதி (25) சென்னையில் வேலை பார்த்துவர, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியை சேர்ந்த மீன் வியாபாரியான தமிழரசனை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.
சமீபத்தில் 6 மாத கர்ப்பமாக இருந்த அருள்ஜோதி, நேற்று முன்தினம் சந்தேகத்திற்கிடமான முறையில் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறிந்த அவரது சகோதரர், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பூந்தமல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதனை சந்தேக மரணம் என பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரது உடல் மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு புளியந்துறைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த அதிர்ச்சியான தகவலை மகளின் தந்தையான வில்லுவுக்கு தெரிவிக்கப்பட்டபோது அவர் பேரதிர்ச்சியில் மூச்சுத்திணறி மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஒரே வீட்டில் தந்தை மற்றும் மகளின் உடல்கள் அருகருகே வைக்கப்பட்டிருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் தாங்க முடியாத சோகத்தில் அழுது தவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.