
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம் நரசிங்கம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் திவ்யராஜ். அவருக்கு நான்கு மகள்கள் ஒரு மகன். இதில் மூன்றாவது மகள் ஜெனிபர் இவருக்கும் உறவினரான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சவுரிராஜ் என்பவரின் மகன் மார்ட்டின் ராஜுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மார்டின் ராஜ் குடும்பத்தினர் ஜெனிபரின் அப்பாவிடம் திருமணம் குறித்து பேசி இருக்கிறார்கள். அதற்கு திவ்யராஜ் தன்னுடைய இரண்டாவது மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை அவருக்கு திருமணம் செய்யாமல் மூன்றாவது மகளுக்கு திருமணம் செய்வது நன்றாக இருக்காது என்று கூறி இருக்கிறார்.
அப்போது மார்ட்டின்ராஜ் பெண் மட்டும் கொடுத்தால் போதும் சீர்வரிசை எதுவும் வேண்டாம் என்று கூறி திருமணம் செய்துள்ளார் .இரண்டாவது மகளுக்கு திருமணம் முடிந்தவுடன் சீர்வரிசை செய்வதாக ஜெனிபரின் பெற்றோர் வாக்குறுதி கொடுத்துள்ளனர். மாட்டின் ராஜ் மலேசியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஜெனிஃபர்ன் அக்காவிற்கு திருமணம் நடந்துள்ளது. அதற்கு ஜெனிஃபர், அவருடைய மாமியார், நாத்தனார் ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது ஜெனிபரின் அக்காவிற்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை தங்களுடைய செல்போனில் ஜெனிபரின் மாமியாரும் நாத்தனாரும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு உனக்கு சீர்வரிசை எதுவும் உன் அப்பா செய்யவில்லை என்று சண்டையிட்டதாகவும் உடனே ஜெனிபரை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அன்று இரவு ஜெனிபர் தன்னுடைய அப்பாவிடம் இது குறித்து செல்போனில் கூறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் வீட்டில் வந்து பார்த்தபோது ஜெனிபர் மயங்கி கிடந்துள்ளார். அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.