கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கேரளா பாலக்காடு செல்லும் சாலையில் ஏராளமான தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளது. அந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதை பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை சுகுணாபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கல்லூரி மைதானத்தின் உள்ளே கஞ்சா விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சோதனை நடத்திய போது மைதானத்தின் உள்ளே மறைத்து வைத்திருந்த கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கல்லூரி அருகே வசித்து வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மிருத்யுஞ்சயரனா, கோவை ஜான் பெட்டர் மற்றும் போத்தனூர் முத்து ஆகிய நான்கு பேரும் போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது.

அவர்கள் கல்லூரி மாணவர்களை மட்டுமே குறி வைத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்தனர். இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.