சென்னையிலிருந்து நேற்று முன்தினம் கொல்லத்திற்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து 7 மாத கர்ப்பிணியான கஸ்தூரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு கஸ்தூரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையின் போது சிசு வயிற்றில் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.