இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான அர்ஷ்தீப் சிங், மைதானத்தில் தனது திறமையால் அல்லாமல் ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ மூலம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளார்.

தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, அர்ஷ்தீப் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மாவை கருப்பானவனே என்று அவர் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

அர்ஷ்தீப் சிங் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், பொதுவெளியில் ஒரு வீரரை நிறத்தைக் கொண்டு கேலி செய்வது முறையல்ல என ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு இடையே நிலவும் இத்தகைய ‘இனவெறி/நிறவெறி’ பேச்சுக்கள் ஆரோக்கியமானதல்ல என்றும், அர்ஷ்தீப் சிங் மீது ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.மும்பை இந்தியன்ஸ் அணி 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 74 ரன்களுக்கு மேல் குவித்து பஞ்சாபை தோற்கடித்து மும்பை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.