
கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் உள்ள பல்வேறு உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) 2022 ஆம் ஆண்டு உத்தரவை மீறி, வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வசூலித்து வருகின்றன.
அநியாமான அந்த நடைமுறையால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக, டெல்லி உயர்நீதிமன்றம் கூட “சர்வீஸ் சார்ஜ் என்பது வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு அமைவாக இருக்க வேண்டும்” என தெளிவாக கூறியுள்ளது. இருப்பினும் உணவகங்கள் அதை கட்டாயமாகக் கருதி பில்லில் சேர்த்து வருகின்றனர்.
சமீபத்தில் பால் சார்ந்த பொருட்கள், குறிப்பாக கோவா, பன்னீர், நெய், வெண்ணெய் ஆகியவை விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தோசை, பன்னீர் பட்டியல் உணவுகள் உள்ளிட்ட பலவகை சாப்பாடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதே நேரத்தில், சர்வீஸ் சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டி என இரண்டு தனித்த கட்டணங்களும் வாடிக்கையாளர்களுக்கு சுமையாக மாறியுள்ளது.
நடுத்தர மற்றும் குறைந்த வருமான மக்கள் உணவகத்தில் சாப்பிடுவது தற்போது பெரும் சவாலாக இருக்கிறது. மேலும் உணவகத்தில் விலை உயர்ந்திருக்கும் உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, ஆன்லைன் உணவுப் பொருள் விநியோக செயலிகளும் உணவுப் பொருட்களின் விலையை அதிகரித்து உள்ளன.
இதற்கு எடுத்துக்காட்டாக, ரூ.370 மதிப்புள்ள உணவு, டெலிவரி கட்டணம், பிளாட்ஃபார்ம் ஃபீஸ், மற்றும் பிற கட்டணங்களுடன் சேர்ந்து ரூ.460 ஆகி விடுகிறது. இதை ‘டிஜிட்டல் சுரண்டல்’ எனக் கூறும் மக்கள், உணவகங்கள் மற்றும் ஆன்லைன் ப்ளாட்ஃபாரங்கள் மீதான கண்காணிப்பை கடுமையாக்க வேண்டும் என்றும், சட்டத்தை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.