தென்காசி மாவட்டம் மேலக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள்(38). இவரது மனைவி மகாலட்சுமி(35). இந்த தம்பதியினருக்கு செந்தில்குமார்,முத்து செல்வம் என்ற மகன்கள் உள்ளனர். லாரி டிரைவராக வேலை பார்க்கும் முருகப்பெருமாள் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தான் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

பக்கத்து ஊரில் தையல் கடை நடத்தி வரும் மகாலட்சுமி குழந்தைகளின் படிப்புக்கு வீட்டு செலவுக்கு என சிறு சிறு கடன்களை வாங்கியுள்ளார். அதை வட்டியுடன் கட்டாததால் தற்போது கடன் அதிகமாகிவிட்டது. இது குறித்து மகாலட்சுமி தனது கணவரிடம் கூறாமல் இருந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று ஊருக்கு வந்த முருகப்பெருமாளுக்கு தனது மனைவி வாங்கிய கடன் பற்றி தெரிந்தது. உடனே எனக்கு தெரியாமல் எவ்வளவு கடன் தான் வாங்கி வச்சிருக்க..? எதுக்கும் முதலில் நீ கடன் வாங்குன? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். இன்று காலை கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டபோது கோபத்தில் முருகப்பெருமாள் தனது மகன்களின் கண் முன்னே மகாலட்சுமியை சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முருகப்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.