விருதுநகர் மாவட்டம் காரியம்பட்டி அச்சம்பட்டி பகுதியில் லட்சுமணன் என்ற 50 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி முத்து என்ற மனைவியும் 13 வயதில் கார்த்திக் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் சிறுவன் கார்த்திக் எட்டாம் வகுப்பு முடித்துள்ளான்.

இவர்களது வீட்டின் அருகே லட்சுமணனின் அண்ணனான ராமர் (54) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளில் லட்சுமணனும் அவரது மனைவியும் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுவன் கார்த்திக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.

பின்னர் அவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்த போது கார்த்திக் சேலை கழுத்தில் சுற்றியபடி இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்து பெற்றோர் கதறி அழுத நிலையில் காரியாபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திக் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இந்த விசாரணையின் போது சிறுவனின் பெரியப்பா ராமரை கைது செய்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது ராமருக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்த நிலையில் சம்பவ நாளில் ராமர் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைக்க விரும்பியுள்ளார்.

இதனால் கார்த்திக்கிடம் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைப்பதற்காக செல்போன் கேட்டுள்ளார். ஆனால் சிறுவன் செல்போனை கொடுக்க மறுத்ததால் கோபத்தில் ராமர் சிறுவனை சேலையால் கழுத்தை நெரித்துக் கொன்றார்.

அதற்கு முன்னதாக அவர் சிறுவனை அடித்து உதைத்து கீழே தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளார். அதன் பிறகு தான் சேலையை கழுத்தில் சுற்றி தவறுதலாக இறந்துவிட்டது போல் நாடகமாடியுள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.