மும்பை அந்தேரி-குர்லா சாலையில் உள்ள டைம்ஸ் சதுக்கம் அருகேயுள்ள எம்பயர் சூட் ஹோட்டலில், வெளிநாட்டு பெண்களை ஈடுபடுத்தி நடைபெற்று வந்த விபச்சாரச் செயல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, MIDC காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனைக்காக ஒருவரை வாடிக்கையாளராக அனுப்பினர். ஹோட்டல் மேலாளர் ஆலம் கலீல் சவுத்ரி, ரூ.6,000க்கு பாலியல் சேவைகளை வழங்கி, அவரை 8வது மாடியில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அந்த நபர், வெளிநாட்டு பெண்ணை சந்தித்ததுடன், பின்னர் மற்றொரு அறையில் இருந்த இரண்டு வியட்நாமிய பெண்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார்.

திட்டமிட்டபடி குறிப்பிட்ட சமிக்ஞையைப் பெற்றதும், போலீசார் ஹோட்டலின் 8 மற்றும் 9வது மாடிகளில் சோதனை மேற்கொண்டு மூன்று வியட்நாமிய பெண்களையும் மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவர்கள் ஆன்லைன் முகவர் ஒருவரின் மூலம் வாடிக்கையாளர்களை சந்தித்து, ஹோட்டலில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும், ஹோட்டல் உரிமையாளர் அப்துல் சலாம் இந்த நடவடிக்கையில் நேரடியாக தொடர்புடையவர் என தெரியவந்தது. மேலாளர் சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஹோட்டல் உரிமையாளர் தலைமறைவாக உள்ளதால், அவரை கைது செய்ய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் வியட்நாம் குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு பாதுகாப்பான தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டனர்.

இது தொடர்பான தகவல்கள் மும்பையில் உள்ள வியட்நாம் தூதரகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலியில் இணையத்தள முகவராக செயல்பட்ட நபரை கண்டறியவும், தொடர்புடைய பிற இடங்களை வெளிக்கொணரவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.