ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தைத் தவிர்க்க தனது பிஎம்டபிள்யூ காரில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய கௌதம் என்ற நபர் போலீசாரிடம் சிக்கினார். வார இறுதி நாட்களில் நடத்தப்பட்ட குடிபோதை சோதனையின் போது, போலீசார் அந்த காரை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

அப்போது காரின் ஓட்டுநர் மது அருந்தியிருந்தது உறுதியான நிலையில், ஒரு காவலர் வாகனத்தை ஓரமாக நிறுத்த முயன்றபோது ஸ்டீயரிங் அருகே இருந்த ஒரு பட்டனை தற்செயலாக அழுத்தினார். அந்த நொடியே காரின் நம்பர் பிளேட் தானாக சுழன்று மற்றொரு எண்ணாக மாறியதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

“>

இந்த உயர் தொழில்நுட்ப ‘ஃப்ளிப்பிங்’ முறையில், ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் டெல்லி பதிவு எண்ணை தெலுங்கானா எண்ணாக மாற்றும் வசதியை அந்த நபர் செய்திருந்தார். இதன் மூலம் போக்குவரத்து கேமராக்களில் இருந்து தப்பித்து அபராதங்களை ஏமாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் அமைக்கப்பட்ட இந்த மோசடி கருவியைக் கண்டு வியப்படைந்த போலீசார், காரைப் பறிமுதல் செய்து ஓட்டுநர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சட்டத்தைச் சாமர்த்தியமாக ஏமாற்ற முயன்ற இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.