
அதிமுகவில் ஜெயலலிதா இருக்கும்போது இருந்தே பணி செய்தவர் மருது அழகராஜ். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டதால் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். இந்த நிலையில் மருது அழகுராஜ் சமீப காலமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை புகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட 2026 ஆம் ஆண்டு விஜய் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்பார் என்று கூறியிருந்தார்.
இதேபோன்று பூஞ்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்ற நிலையில் அதை தொடர்ந்து மருது அழகுராஜ் விஜயை புகழ்ந்தார். அதில் சபாஷ் விஜய். விக்கிரவாண்டியில் விதைத்தது, பரந்தூரில் வெடித்தது, பூஞ்சேரியில் பூத்தது, நாளை பூக்களில் யூத்களாய் காய்த்து அது புனித ஜார்ஜ் கோட்டையில் கனியட்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்னும் தொல்லிணக்க தத்துவத்தை பொய்க்காது காக்கட்டும் என்று கூறினார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜயை புகழ்ந்து மீண்டும் ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அந்தப் பதிவில், ஒரு பக்கம் அந்த கட்சியோடு கூட்டணி உறுதியாகிவிட்டது என்றும் மறுபக்கம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்து விடாதீர்கள் என்றும் மன்றத்து ரசிகர்களைக் கொண்டே வேட்பாளர்கள் பட்டியல் தயாராகிவிட்டது என்பதற்காகவும் தமிழக வெற்றி கழகத்தை முளைத்த நிலையிலேயே முடக்குவதற்காக முன்னெடுக்கப்படும் ஊடக தாக்குதல்கள் எல்லாம் உணர்த்துவது விஜய் மீதான பயத்தை மட்டும் தான் என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் கண்டிப்பாக அடுத்த வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு சவாலாக இருப்பார் என்று கூறப்படும் நிலையில் நடிகர் விஜயின் மீது வரும் விமர்சனங்கள் எல்லாம் தேர்தலை நினைத்து அவர் மீதுள்ள பயத்தினால் என்று அர்த்தத்தில் மருது அழகுராஜ் கூறியுள்ளார். மேலும் மருது அழகுராஜ் தொடர்ந்து விஜயை புகழ்ந்து வரும் நிலையில் விரைவில் அவர் அந்த கட்சியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.