திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் தெய்வ சிகாமணி(76), அலமேலு(65) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் தோட்டத்து வீட்டில் தங்கி இருந்து விவசாயம் செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு செந்தில்குமார்(45) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செந்தில்குமார் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இரவு 3 பேரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்டது. இதனால் தெய்வசிகாமணி வெளியே சென்று பார்த்தார். அப்போது அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த செந்தில் குமார், அலமேலு ஆகியோரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். மறுநாள் காலை விடிந்தவுடன் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது செந்தில் குமாரின் மனைவி நான் குழந்தைகளை எப்படி வளர்ப்பேன். தூங்கிக் கொண்டிருந்த என் கணவரை வெட்டி கொன்றனர். கண்டிப்பாக பிடிக்க வேண்டும். பிடிக்கவில்லை என்றால் போலீசாருக்கு தான் கேவலம் என கதறி அழுதார். பின்னர் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரித்த போது மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு 8 பவுன் தங்க நகை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.