
பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ளது. பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நான் தான் கட்சியின் தலைவர் என்று கூறியதோடு நான் உயிரோடு இருக்கும் வரை நான் மட்டும்தான் பாமக கட்சியின் தலைவராக இருப்பேன் என்றும் அன்புமணிக்கு தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
அதன்பிறகு தாய் தந்தைக்கு மரியாதை கொடுப்பதில்லை எனத் தொடங்கி கட்சிக்காக அன்புமணி உழைப்பதில்லை என பல்வேறு குற்றசாட்டுகளை அன்புமணி மீது ராமதாஸ் முன் வைத்துள்ள நிலையில் 3 வருடங்கள் மட்டுமே அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுத்துள்ளதால் தற்போது அந்த காலக்கெடு முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் கட்சியினர் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்கள். இதற்கிடையில் இன்று திருவள்ளூரில் பாமக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் அதில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி கலந்து கொண்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது, தமிழ்நாட்டை ஆட்சி செய்வதற்கு தகுதியுள்ள ஒரே ஒரு கட்சி பாமக தான். சமூக நீதிக்காக பாமக என்ற கட்சியை ராமதாஸ் தொடங்கியுள்ள நிலையில் சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என்றார். அதன் பிறகு இன்று தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் ராமதாஸிடம் மனப்பூர்வமாக பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். என் மீது ஏதாவது கோபம் இருந்தால் மருத்துவ அய்யா அவர்கள் மன்னிக்க வேண்டும். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் பெரிய விஷமம் அல்ல. ஐயா நூறு வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக அய்யாவுக்கு பைபாஸ் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பிபி, சுகர் எல்லாமே இருக்கிறது.
அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. எனவே ஐயா அவர்களே கோபப்படாதீர்கள். பிபி இருப்பதால் டென்ஷன் ஆக வேண்டாம். இது நீங்கள் உருவாக்கிய கட்சிதான் எனவே வருத்தப்படாதீர்கள். கடினமான காலங்களை கடந்து வந்த நீங்கள் கட்சிக்காக பல தியாகங்களை செய்துள்ளீர்கள். எனவே என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கூறுங்கள் கட்சியின் தலைவராக அதனை நான் செய்து முடிக்கிறேன்.
பிரதமர் மோடி சொன்னது போல் நீங்கள் இந்தியாவின் தேசிய தலைவர் மற்றும் மூத்த அரசியல்வாதி. தமிழ்நாட்டிற்கு மட்டும் நீங்கள் தலைவர் அல்ல இந்தியாவிலேயே நீங்கள் தான் மூத்த அரசியல் தலைவர் என பிரதமர் மோடியே கூறியுள்ளார். மேலும் ஒரு மகனாக நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதால் என்ன செய்ய வேண்டும் என கூறுகிறீர்களோ அதனை உடனடியாக நான் ஒரு தலைவராக செய்து முடிக்கிறேன் என்று கூறினார்.