
திருவள்ளூர் மாவட்டம் கனகமாசத்திரம் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு புகார் கொடுப்பதற்காக சென்ற கர்ப்பிணி உட்பட 3 பெண்களை தலைமை காவலர் ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த வீடியோவும் வைரல் ஆகிறது. அதாவது சிவாஜி என்பவர் தங்களிடம் தகாத முறையில் நடந்ததாக கூறி 5 மாத கர்ப்பிணி பெண் உட்பட 3 பெண்கள் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றனர். அப்போது அவர்களை தலைமை காவலர் ராமன் என்பவர் அடித்து தாக்குகிறார். கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் அவர் அடித்தார்.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தலைமை காவலர் ராமனை திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குற்றஞ்சாட்டப் பட்டவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டோரை சரமாரியாகத் தாக்கும் அளவிற்கு காவல்துறை அதிகாரிக்கு துணிச்சல் எங்கு இருந்து வந்தது? அதிலும் ஒரு ஏழை கர்ப்பிணி பெண்ணை தாக்கும் அளவிற்கா காவல்துறையினரிடம் மனிதத்தன்மை மலிந்துவிட்டது? குற்றவாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்டோரை காக்க வேண்டிய காவல்துறையே பாதிக்கப்பட்டோரை தாக்கினால், திராவிட மாடல் ஆட்சியில் எங்கு சென்று நீதி கேட்பது என்று புரியவில்லை.
மேலும் காவல்துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு தீர விசாரணை செய்து, அதிகார மமதையில் அராஜகத்தின் ஊற்றிடமாக செயல்பட்டு மூன்று பெண்களை தாக்கிய காவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதல்வர் திரு. முக ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
குற்றஞ்சாட்டப் பட்டவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு… pic.twitter.com/WUAPr42Lnb
— Nainar Nagenthiran (@NainarBJP) June 24, 2025