
2024 ஒலிம்பிக்கில் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார். இவர் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டி வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். ஆனால் இறுதிப் போட்டியில் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும் மேல்முறையீடு செய்து அரை இறுதிப்போட்டி வரை வந்ததால் வெள்ளிப் பதக்கம் தர வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் குழு மனு தாக்கல் செய்தது. ஆனால் விளையாட்டு நடுவர் மன்றம் அதனை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, என்னுடன் இருந்த மருத்துவர், பிசியோ மற்றும் சக ஊழியர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுப்பற்றி கூற இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் சொல்ல வார்த்தைகள் போதுமானதாக இருக்காது. நேரம் வரும்போது மீண்டும் பேசுவேன். ஆனால் நான் சொல்ல நினைப்பதெல்லாம், நாம் கைவிடவில்லை, முயற்சிகள் நிற்கவில்லை, சரணடையவில்லை, ஆனால் நேரம் போதவில்லை, கடிகாரம் நின்றுவிட்டது, என் விதியும் அப்படித்தான் என்று கூறினார்.
எனது குடும்பத்தினரும், சக ஊழியர்களும் சேர்ந்து உழைத்துக் கொண்டிருந்த இலக்கு மற்றும் திட்டமிட்டது நிறைவேறவில்லை. சூழ்நிலை எனக்கு சாதகமாக இருந்தால் 2032 வரை விளையாடியிருப்பேன். ஏனென்றால் எனக்குள் சண்டையும், மல்யுத்தமும் உயிருடன் தான் இருக்கும். நான் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறேன், அடுத்த பயணத்தில் எனக்கு என்ன காத்திருக்கிறது என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் நான் எதை நம்புகிறேனோ அதற்காக போராடுவேன் என்று கூறினார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.