ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலமாக பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகளும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இளைஞர் ஒருவர் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளம் மூலமாக சுமார் 35,000 ரூபாய் மதிப்புள்ள விவோ (Vivo) ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்திருந்தார்.
பல நாட்களாகத் தனது புதிய போனின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்த அந்த இளைஞருக்கு, டெலிவரி பாய் பார்சலை கொண்டு வந்து கொடுத்தபோது மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனால், அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை. ஆவலோடு பாக்ஸை பிரித்துப் பார்த்த அந்த இளைஞருக்குப் பேரிடியாக, உள்ளே போனுக்குப் பதிலாக துணி துவைக்கும் சோப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த அதிர்ச்சிகரமான ஏமாற்று வேலைக்கு எதிராக அந்தப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, டெலிவரியில் நடந்த இந்தத் தில்லுமுல்லு குறித்துப் புகார் அளித்துள்ளார். பேக்கேஜிங் செய்யும் போது தவறு நடந்ததா அல்லது நடுவழியில் யாராவது போனை திருடிவிட்டு சோப்பை வைத்தார்களா என்று அவர் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
₹35,000 Smartphone Ordered, But What Arrived Left Everyone Shocked!
A young man had ordered a Vivo smartphone worth ₹35,000 online and was eagerly waiting for its delivery. However, when the package finally arrived and he opened the box, he was stunned to find a bar of… pic.twitter.com/mlqHsw4AOK
— Aishwariya (@CuteAishwariya) June 23, 2026
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, பல நெட்டிசன்களும் தங்களுக்கு நடந்த ஆன்லைன் ஏமாற்றங்களை காரசாரமாகப் பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிக்க, விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது டெலிவரி வாங்கும் போதே ‘அன்பாக்சிங் வீடியோ’ (Unboxing Video) எடுப்பது மட்டுமே சரியான ஆதாரம் என்றும், அதுவே பணத்தைத் திரும்பப் பெற உதவும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
