சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்யமலை அக்கரைப்பட்டி கிராமத்தில் ரவி(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவருக்கு மாதம்மாள்(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மனோரஞ்சனி(7), நித்தீஸ்வரி(3) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தற்போது மூன்றாவதாக மாதம்மாள் கருவுற்று கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் பெற்றோர் வீட்டிற்கு சென்ற மாதம்மாள் கடந்த வாரம் தான் மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

அதன் பிறகு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாதம்மாள் தனது இரண்டு மகள்களுடன் விவசாய தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவியை காணாமல் தேடி அலைந்த ரவி கிணற்றில் உடல்கள் கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கர்ப்பிணி பெண் மற்றும் அவரது மகள்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை பற்றி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.