இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுடன் ஏற்பட்ட முறுகல் மற்றும் மோதல் போக்கு குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்த கருத்துகளுக்கு இந்திய இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
கொழும்பு டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளத்தில் இரு வீரர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றியதுடன், லேசான முறையில் தலையால் முட்டும் சம்பவமும் அரங்கேறியது. இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதமானதுடன், ஜெய்ஸ்வாலுக்கு அபராதம் அல்லது தடை விதிக்கப்படலாம் என்ற அச்சமும் எழுந்தது.
இதுகுறித்து ‘கிரிபஸ்’ தளத்திற்காக வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் பேசிய ஹர்ஷா போக்லே, களத்தில் அசிதா பெர்னாண்டோவால் ஜெய்ஸ்வால் சீண்டப்பட்டதை ஒப்புக்கொண்டார். இருப்பினும், ஒரு சிறந்த வீரரான ஜெய்ஸ்வால் அந்தச் சூழ்நிலையில் சண்டைக்குச் செல்லாமல் அமைதியாக விலகிச் சென்றிருக்க வேண்டும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.
🥵 THINGS GET HEATED! 🥵
Yashasvi Jaiswal and Asitha Fernando exchange words as tensions rise in the middle. 👀
Watch #SLvIND, 2nd Test, LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #SonyLIV #BeautifulGameOfTestCricket pic.twitter.com/7qJrORjx8V
— Sony Sports Network (@SonySportsNetwk) August 23, 2026
மேலும், “யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் அளப்பரிய திறமை உள்ளது. ஆனால், அவர் சற்று ஆக்ரோஷமான மற்றும் சண்டையிடும் சுபாவம் கொண்டவராக இருக்கிறார். அவரது இந்த குணம், ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக அவர் அடைந்துள்ள புகழுக்குத் தடையாக அமைந்து, அவரைச் சிக்கலில் மாட்டிவிடக் கூடாது என்பதே எனது கவலை” என போக்லே குறிப்பிட்டிருந்தார்.
ஹர்ஷா போக்லேவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளம் மூலமாகவே நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார் ஜெய்ஸ்வால். அவர் தனது பதிவில், “அவர் என்னிடம் என்ன சொன்னார் என்பதே உங்களுக்குத் தெரியாமல், தயவுசெய்து எதைப் பற்றியும் ஒரு தீர்ப்புக்கு வந்துவிடாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், களத்தில் யாராவது எல்லையை மீறினால், “அவர்களுக்குப் புரிய வைக்கும் விதமாக நாம் பதிலடி கொடுத்தாக வேண்டும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், “இந்த இந்தியா ஒருபோதும் பின்வாங்காது; சண்டையிட்டு பதிலடி கொடுக்கும்” எனத் தனது ஆக்ரோஷமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
