
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் மனநல காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு 22 வயதுடைய வருண் கான் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான லட்சுமணன், அவரது மனைவி கவிதா, இவர்களது மகள்கள் ஸ்ரேயா, சுருதி மற்றும் ஷாஜி ஆகிய ஐந்து பேரும் தலைமறைவாகினர்.
அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஐந்து பேரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து ரூபாய் 1,50,000 பணம் மற்றும் 18 சவரன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்படுகிற பொருட்களை அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பின்னர் வழக்கு முடிந்த பின்பு உரியவர்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.ஆனால் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் பணம் மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு வராததால் இதுகுறித்து மேலதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது குற்றவாளிகளின் உறவினர் ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை கையாடல் செய்ததாக கூறினார்.எனவே காவல் உதவியாளர் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.