
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அன்புமணி மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ஏற்கனவே பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் ராமதாஸ் அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ராமதாஸ் கூறியதாவது, கடந்த 7 வருடங்களுக்கு முன்பாகவே அன்புமணி என்னிடம் கட்சியை பார்த்துக் கொள்வதாக கூறிய நிலையில் அதற்கான அர்த்தம் அப்போது புரியவில்லை இப்போது தான் புரிகிறது.
அன்புமணி கட்சியை வளர்ப்பதற்காகவோ அல்லது முன்னேற்றம் செய்வதற்காகவோ எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அது டிராவில் முடிவடைந்தது. இனி நீயா நானா என பார்த்து விடலாம் என முடிவு செய்துவிட்டேன். தேர்தல் முடியும் வரை நான் தான் பாமக கட்சியின் தலைவராக இருப்பேன். அதோடு கூட்டணி தொடர்பாகவும் நான் தான் முடிவு செய்வேன். இன்னும் ஒரு சில வருடங்கள் எனக்கு தலைவராக இருக்க உரிமை இல்லையா.?
என்னை குலசாமி என கூறிக்கொண்டு என் நெஞ்சில் குத்துகிறார்கள். ஐயா எனக் கூறிக்கொண்டு பாதாளத்தில் தள்ளப் பார்க்கிறார்கள். தேவையற்ற பொய்களை கூறி மாவட்ட செயலாளர்களை அன்புமணி மிரட்டுவதோடு என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிற அளவுக்கு அன்புமணியின் செயல்பாடுகள் இருக்கிறது. ஐயாவுக்குப் பிறகு அன்புமணி. குருவை மிஞ்சிய சிஷ்யன் இருக்கலாம். ஆனால் தந்தையை மிஞ்சிய மகன் இருக்கக் கூடாது.
அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்துமே நாடகம். நான் பாமக தொண்டர்களை வழிகாட்டிகளாக நினைப்பதோடு எனக்கு அமைச்சராக வேண்டும் மத்திய மந்திரி ஆக வேண்டும் என எந்த பதிவி மீதும் ஆசை கிடையாது. ஆனால் பாமகவினரை வழிநடத்துவதற்காக நான் தான் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருப்பேன். மேலும் என்னை நடைப்பிணம் ஆக்கிவிட்டு என் பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் செய்யப் போகிறார்கள் என்று கூறினார்.