அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர் என எடப்பாடி பழனிச்சாமியும், அண்ணாமலையும் ஆதாரத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வந்தனர். ஆனால் அவர் திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என திமுக தரப்பில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், திமுகவை எதிர்த்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். அவரைபலரும் விமர்சித்தனர்.

அதில் திமுக கவுன்சிலர் ரவிச்சந்திரன் அண்ணாமலை பஞ்சு சாட்டையை வைத்து தன்னை தானே அடித்துக் கொண்டதாக கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதுமே, பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கும் நிலையில், சென்னை மாமன்றக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி 184 ஆவது வார்டு உறுப்பினரும், 14 ஆம் மண்டலக் குழுத் தலைவருமான எஸ்.வி.ரவிச்சந்திரன் என்பவர், பாதிக்கப்பட்ட மாணவியை, மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளி தங்கள் கட்சிக்காரன் என்பதற்காக, பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகப் பேசும் தைரியம் யார் தந்தது?

இந்த எஸ்.வி.ரவிச்சந்திரன் என்ற நபர், கடந்த நில ஆக்கிரமிப்புக்குப் பெயர் போன 2006 – 2011 திமுக ஆட்சியில், பெருங்குடி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள காலி இடங்கள், கட்டிடங்களை எல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்த குற்றத்திற்காக, குண்டாஸ் வழக்கில் கைதானவர். ஒட்டு மொத்த அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் திமுகவில், இது போன்ற நபர்களை மாமன்றத்திற்கு அனுப்பியதில் ஆச்சரியமில்லை. பஞ்சினால் செய்த சாட்டை என்கிறார் இந்த ரவிச்சந்திரன். கோவையில் எனது இல்லத்தில் இருக்கும் அந்தச் சாட்டையைக் கொண்டு வருகிறேன். பஞ்சுச் சாட்டைதானே. அவர் மீதே சோதித்துப் பார்க்கலாம். தயாரா? என பதிவிட்டுள்ளார்.