ஜப்பானில் ஒரு மாணவியின் கல்விக்காக அரசு எடுத்த மனதைக் கவரும் முடிவு, இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி மூலம் உலகின் கவனத்தை ஈர்த்து, வைரலாகி வருகிறது. ஹொக்கைடோவில் உள்ள காமி-ஷிராடகி என்ற அமைதியான ரயில் நிலையத்தில் பயணிகள் குறைவாக இருந்ததால், அந்த வழித்தடத்தில் ரயில் சேவையை நிறுத்துவது என ஜப்பான் ரயில்வே திட்டமிட்டது. ஆனால், அந்த நிலையத்தை ஒரே ஒரு மாணவி பள்ளிக்குச் செல்ல பயன்படுத்துவது தெரியவந்தது. இதையறிந்த அரசு, அந்த ஒரு மாணவியின் கல்வி பயணம் தடைபடக் கூடாது என்பதற்காக, அவளுக்காக மட்டுமே ரயில் சேவையைத் தொடர முடிவு செய்தது.
இந்த மாணவிக்கு வசதியாக, ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே ரயில் அந்த நிலையத்தில் நின்றது. காலையில் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் ஒரு முறையும், மாலையில் வீடு திரும்பும் நேரத்தில் மற்றொரு முறையும், மாணவியின் அட்டவணைக்கு ஏற்ப ரயில் துல்லியமாக இயக்கப்பட்டது. 2016இல் அந்த மாணவி தனது பள்ளிப்படிப்பை முடித்தபின், இந்த சிறப்பு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. ஒரு மாணவியின் கல்விக்காக அரசு இப்படி ஒரு முடிவு எடுத்தது, ஜப்பானின் கல்வி மீதான அக்கறையை உலகிற்கு உணர்த்தியது.
