
மும்பையில் ஒரு 28 வயது பெண் விமானி, உபர் டாக்ஸியில் தனியாக பயணித்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பரிதாபமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு மும்பையின் கோட்டை பகுதியில் தொடங்கி காட்கோபரில் முடிந்துள்ளது. வாடகை டாக்ஸி ஓட்டுநர் தவறான பாதையில் வண்டியை இயக்கியதுடன், வழியிலே இரண்டு அடையாளம் தெரியாத ஆண்களை டாக்ஸிக்குள் ஏற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், அந்த இரண்டு பேர் அந்தப் பெண் விமானியை தவறான நோக்கத்துடன் தொட்டு, மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இரவு 11 மணியளவில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் பகுதியில் தனது கடற்படை அதிகாரி கணவரை சந்தித்துவிட்டு வீட்டிற்கு உபர் டாக்ஸியில் தனியாக பயணித்த அந்தப் பெண் விமானி, 25 நிமிடங்கள் பயணித்ததன் பிறகு ஓட்டுநர் பாதையை மாற்றியுள்ளார். பின்னர் இருவர் வண்டிக்குள் ஏறியதும், அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பெண் விமானி கத்தியதும், அந்த இளைஞர்கள் மிரட்டல்களையும் மேற்கொண்டுள்ளனர். வழியில் வந்த போலீஸ் சோதனை சாவடியைக் கண்டதும், அவர்கள் இருவரும் வண்டியிலிருந்து இறங்கி தப்பியோடியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, டாக்ஸி ஓட்டுநரை கைது செய்துள்ளனர். மேலும், அடையாளம் தெரியாத இரண்டு குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர். அவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (BNS) பிரிவுகள் 75(1) (பாலியல் தொல்லை), 351(2) (மிரட்டல்) மற்றும் 3(5) ஆகியவை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.