உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 ஆண்டுக்கான போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த நடப்பு உலக சாம்பியனான டிங் லென்னை வீழ்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார்.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்தவர் குகேஷ். குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அதிகாரிகள் அதுல்யா மிஸ்ரா, மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து குகேஷை வரவேற்றனர். தமிழக அரசு சார்பில் சிறப்பு கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். அது மட்டும் இல்லாமல் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட பலரும் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு சார்பில் பட்டம் வென்ற குகேஷுக்கு 5 கோடி ரூபாய் காசோலை வழங்கப்பட உள்ளது.