அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்த வளர்ப்புத் தந்தையை 11 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளேட்டன் டயட்ஸ் என்ற அந்தச் சிறுவன், நள்ளிரவு தாண்டி நீண்ட நேரம் ‘நின்டெண்டோ ஸ்விட்ச்’ (Nintendo Switch) விளையாடிக்கொண்டிருந்தபோது, அவனது பெற்றோர் விளையாட்டை நிறுத்திவிட்டு உறங்கச் செல்லுமாறு கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனது விளையாட்டுச் சாதனம் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிப் பாதுகாப்புப் பெட்டியைத் தேடியுள்ளான். அங்கு சாதனத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, பெட்டியின் சாவியையும் அதன் அருகில் இருந்த ஒரு ரிவால்வர் ரகத் துப்பாக்கியையும் கண்டெடுத்துள்ளான். பின்னர், கோபத்தின் உச்சத்தில் தனது வளர்ப்புத் தந்தையான டக்ளஸ் டயட்ஸை (42) துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் காவல்துறை அச்சிறுவனைக் கைது செய்துள்ளது. பொதுவாகச் சிறுவர்கள் செய்யும் குற்றங்கள் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றாலும், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, 11 வயது சிறுவனான கிளேட்டனை ஒரு முதிர்ந்த நபராகக் (Adult) கருதி ‘கொலை முயற்சி மற்றும் திட்டமிட்ட கொலை’  பிரிவின் கீழ் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தச் சிறுவன், கைவிலங்குடன் நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்ட காட்சி அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. மேலும் நவீன கால வீடியோ கேம் அடிமைத்தனம் மற்றும் துப்பாக்கிகள் எளிதில் சிறுவர்களுக்குக் கிடைப்பது போன்ற ஆபத்துகளை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.