விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநத்தம் பெரியார் காலனியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதுடைய தர்ஷன் என்ற மகன் இருந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். ராஜேஸ்வரி மகனுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு அருகே புதிதாக வீடு கட்டப்படுகிறது. அந்த வீட்டின் முன் பகுதியில் செப்டிக் டேங்க் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி நிரம்பி இருந்தது.

இந்த நிலையில் தர்ஷன் எதிர்பாராதவிதமாக அந்த தண்ணீரில் தவறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி தனது மகனை காப்பாற்ற முயன்ற போது அவரும் பள்ளத்திலிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய் மற்றும் மகனின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.