ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழாவில், தங்கம் வென்ற வீரருக்கு அதிபர் விளாடிமிர் புதின் மண்டியிட்டு பதக்கம் அணிவித்த நெகிழ்ச்சியான காட்சி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

குளிர் கால பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பான சாதனைகளைப் படைத்த வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்றது. இதில் தங்கம் வென்ற வீரர் இவான் கோலுப்கோவ் என்பவருக்குப் பதக்கம் அணிவிக்க அதிபர் புதின் மேடைக்கு வந்தார்.

வழக்கமான அதிகாரத் தோரணை ஏதுமின்றி, அந்த வீரரின் உயரத்திற்கு ஏற்ப அதிபர் புதின் தனது முழங்கால்களை மடக்கி மண்டியிட்டு அமர்ந்து அவருக்குப் பதக்கத்தை அணிவித்தார். ஒரு நாட்டின் அதிபர், விளையாட்டு வீரருக்கு வழங்கிய இந்த உயரிய மரியாதை அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே உலகம் முழுவதும் வைரலானது. “உண்மையான வலிமை என்பது எங்கு பணிய வேண்டும் என்று தெரிந்திருப்பதே” என இணையவாசிகள் புதினின் இந்தச் செயலைப் பாராட்டி வருகின்றனர். ஒரு தலைவரின் எளிமைக்கும், விளையாட்டு வீரர்களுக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்திற்கும் இது ஒரு சிறந்த உதாரணம் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by The Tatva (@thetatvaindia)

இந்த முறை ரஷ்ய பாரா ஒலிம்பிக் அணி மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் (6 பேர்) களம் இறங்கியது. இருப்பினும், அவர்கள் காட்டிய அபாரத் திறமையால் பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து இமாலயச் சாதனை படைத்துள்ளனர். விழாவின் போது, இவான் கோலுப்கோவ் உள்ளிட்ட வீரர்களுக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் பிரண்ட்ஷிப்’  வழங்கப்பட்டது. ,  வீரர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கும் அதிபர் புதின் தனது பாராட்டுகளையும் சிறப்பான கௌரவத்தையும் வழங்கினார்.