மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் பான் கார்டு முக்கியமானதாக இருப்பதால் அனைத்து வகையான நிதி சேவைகளையும் செய்ய பயன்படுகின்றது. வங்கி கணக்கை திறப்பது முதல் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்வதற்கும் வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கும் பான் கார்டு பயன்படுகிறது. இதனால் மக்கள் பான் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த நிலையில் உங்களது பான் கார்டு தொலைந்து விட்டால் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக மீண்டும் அதனை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு முதலில் வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் முகப்பு பக்கத்தில் e-pan என்ற விருப்பத்தை தேர்வு செய்து get new e-pan என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பிறகு திறக்கும் பக்கத்தில் ஆதார் எண்ணை உள்ளிட்டு confirm தேர்வு பெட்டியை தேர்வு செய்து continue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் ஓடிபி சரிபார்ப்பு பக்கத்தில் நான் விதிமுறைகளை படித்து விட்டேன் என்ற விருப்பத்தை கிளிக் செய்து ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி பதிவிட வேண்டும்.

பிறகு UIDAI உடன் ஆதார் கார்டு விவரங்களை சரிபார்க்க தேர்வு பெட்டியை தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதை கிளிக் செய்த பின் ஆதார் சரிபார்ப்பு விவரங்கள் பக்கத்தில் நான் ஏற்கிறேன் என்பதை தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் உங்கள் மொபைல் எண்ணில் ஒரு வெற்றிகரமான செய்தி வந்து சேரும். அதில் கொடுக்கப்பட்டுள்ள ஒப்புகை ஐடியை குறித்துக் கொள்ளுங்கள். அதை உள்ளிட்டு நீங்கள் e-pan கார்டு எளிதில் பெறலாம்.