
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) படிக்கும் மாணவி ஒருவருக்கு ஒப்பந்த ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒப்பந்த ஊழியர் கதிரேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு விடிய விடிய போராட்டம் நடத்தினர். புகார் அளித்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாணவிகளின் ஆடை குறித்து விமர்சனம் செய்த விடுதி காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம், கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. மாணவிகள் பாதுகாப்பாக படிக்க வேண்டிய கல்லூரி வளாகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மாணவிகளின் வேண்டுகோளாக உள்ளது.