ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக, நாம் தமிழர் கட்சி, அமமுக போன்ற கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதன்படி இபிஎஸ் தரப்பில் கே.எஸ் தென்னரசு வேட்பாளராகவும், ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் பிறகு ஓபிஎஸ் தரப்பு பாஜக போட்டியிட்டால் தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொள்வோம் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்பு எங்களிடம் வந்து பேசி பொது வேட்பாளரை நியமிக்கலாம் என்று கூறினால் கண்டிப்பாக நான் ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன். அதிமுகவில் பொது வேட்பாளரை நிறுத்துவது தான் மிகப்பெரிய பலம். இதன் காரணமாக நான் எடப்பாடி பழனிச்சாமியுடன் சமரசமாக செய்வதற்கும் தயாராக இருக்கிறேன் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.