காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில்  ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளவர்கள் தாங்கள் வைத்துள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்கும் படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையம் அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத கிடங்கில் ஒப்படைத்து ரசீது பெற்றுக் கொள்ளலாம். மீறினால் படைக்கல சட்டம் 1959ன் பிரிவு 30ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.