பெங்களூருவின் உத்தரஹள்ளி பகுதியில் வசித்து வந்த நேத்ராவதி (34) என்ற பெண்ணைத் தன்னுடைய மகளும், மகளின் கள்ளக்காதலன் மற்றும் அவனது மூன்று நண்பர்களும் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு சுப்ரமணியபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தக் கொடூரமான குற்றம் நடந்துள்ளது. நேத்ராவதி தன்னுடைய டீன் ஏஜ் மகளுடன் வசித்து வந்துள்ளார். மகளின் கள்ள உறவு குறித்து அறிந்த நேத்ராவதி, சம்பவத்தன்று இரவு சுமார் 11 மணியளவில் கண்விழித்தபோது, வீட்டில் மகளையும் அவளது காதலனையும் ஒன்றாகப் பார்த்ததால் கோபமடைந்து இருவரையும் கடுமையாகத் திட்டியுள்ளார்.

சண்டையாக ஆரம்பித்த இந்தச் சம்பவம், சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியது. ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த மகளும், அவளது நண்பர்களும் சேர்ந்து நேத்ராவதியைக் கீழே தள்ளிப் பிடித்துக்கொண்டு, வாயைப் பொத்தித் தடுத்துள்ளனர்.
இந்தச் சண்டையின்போது, ஒரு துண்டை எடுத்து அவரது கழுத்தைச் சுற்றிக் கட்டி நெரித்துக் கொலை செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தக் கொடூரக் கொலைக்குப் பிறகு, அந்த ஐந்து பேரும் பதற்றமடைந்துள்ளனர்.
தங்கள் குற்றத்தை மறைக்க எண்ணிய அந்தச் சிறுவர்கள், நேத்ராவதியின் கழுத்தில் ஒரு சேலையைக் கட்டி, மின்விசிறியில் தொங்கவிட்டு, அது ஒரு தற்கொலை போலக் காட்சியளிக்க ஏற்பாடு செய்தனர். அதன்பின்னர், வீட்டைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

நேத்ராவதியையும், மகளையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், அவரது அக்காவே வீட்டிற்குச் சென்றுள்ளார். அவர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, நேத்ராவதி மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார்.
நேத்ராவதியின் உடல் திங்கட்கிழமை காலையில் கண்டெடுக்கப்பட்டது. முதலில் சுப்ரமணியபுரா போலீசார் இதுகுறித்துச் சந்தேக மரணம் (UDR) என்று மட்டுமே வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால், தாயின் இறுதிச் சடங்கில் கூட மகள் கலந்து கொள்ளாமல் காணாமல் போனது போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
புதன்கிழமை, மகளின் அத்தை காணாமல் போனதாகப் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதிகாரிகள் மகளின் காதலனை விசாரித்தபோது, அவன் உடைந்துபோய் உண்மையை ஒத்துக் கொண்டான். நேத்ராவதி கொலை செய்யப்பட்டதாகவும், தற்கொலை நாடகம் ஆடியதாகவும் அவன் அளித்த வாக்குமூலம் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
மகளும், அவளது காதலன் மற்றும் அவனது மூன்று நண்பர்கள் உட்பட ஐந்து சிறுவர்களும் தற்போது கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
