
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படும் சம்பவங்கள் என்பது தொடர்கதை ஆகிவிட்டது. வேலூர் அருகே ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் அந்த பெண்ணின் கரு கலைந்தது. இதனைத் தொடர்ந்து பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இரவு 10 மணிக்கு பிறகு புறப்படும் ரயில்களில் ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ரயிலில் தினந்தோறும் பயணிக்கும் பெண்கள் மற்றும் சிறு தொழிலில் ஈடுபடும் தின்பண்ட வியாபாரிகள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து பகுதி வாரியாக whatsapp குழுவை உருவாக்குவதற்கு ரயில்வே காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலமாக பெண் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவு, செல்போன் மற்றும் செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை எளிதில் கண்டறிய இந்த வாட்ஸ் அப் குழு பயன்படும் என்று ரயில்வே காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.