சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எட்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது, என்னை தோல்வி அடைந்த அரசியல்வாதி என்று கூறுகிறார்கள். நான் மட்டும் 20 வருடங்களுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் நான் பேசும் இடமும் இருக்கிற இடமும் வேறு விதமாக இருந்திருக்கும். நான் 20 வருடங்களுக்கு முன்பாகவே அரசியலுக்கு வராமல் விட்டது தான் தவறு. இந்த வருடம் நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கப் போகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த வருடம் சட்டமன்றத்திலும் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என்று கூறினார்.

அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு கமல்ஹாசன் போட்டியிடவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போது 6 நாடாளுமன்ற எம்பிகள் பதவி காலியான நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கமல்ஹாசனுக்கு எம்பி பதவி வழங்கப்பட இருக்கிறது. இதனை சூசகமாக உறுதிப்படுத்தும் விதமாக தான் நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க போகிறது என்று கூறினார். மேலும் கல்விக்கான நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கும் நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனங்களை தெரிவித்தார்.