திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள குண்டியாந்தங்கல் கிராமத்தில் சுவாதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 21-ஆம் தேதி சுவாதிக்கு ஸ்ரீதர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதர் தனியார் வங்கியில் கடன் பிரிவு அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். தலை தீபாவளி கொண்டாடுவதற்காக சுவாதியும் ஸ்ரீதரும் சுவாதியின் வீட்டிற்கு வந்தனர். தீபாவளியை கொண்டாடிவிட்டு ஸ்ரீதர் தனது மனைவியின் விருப்பத்தின் பேரில் அவரை தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு ஊருக்கு சென்றார்.

இந்த நிலையில் சுவாதி சேலை கட்டாமல் டீ-ஷர்ட் அணிந்ததாக தெரிகிறது. இதனால் திருமணம் ஆன பெண் இப்படி உடை அணியக்கூடாது என பெற்றோர் கண்டித்தனர். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த பெற்றோர் சுவாதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சுவாதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.