மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 6) காலை பயணிகளை அச்சமூட்டும் வகையில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்தது. அதாவது வழக்கத்திற்கு மாறாக, ஒரு இளைஞர் தனது காரை நேராக பிளாட்பாரம் எண் 6-க்குள் ஓட்டிச் சென்று தண்டவாளத்தின் அருகே நிறுத்தினார். அதே நேரத்தில் மற்றொரு இளைஞர் பிளாட்பாரம் எண் 4-ல் மிகவேகமாக ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றார். இருவரது செயல்களும் பயணிகளால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் தற்போது தீவிரமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் ‘போபால் ரயில் நிலையம் ஒரு ஸ்டண்ட் செய்யும் இடம்போல்  மாறியது’ என பயணிகள் வேதனையுடன் கூறும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு வளையங்களும், தணிக்கைகள் இருந்தும் இவ்வாறு பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நடைமேடையில் வாகனங்களை ஓட்டிச் செல்ல முடிந்தது என்பது ரெயில்வே துறையின் பாதுகாப்பு தோல்வியையே காட்டுவதாக சமூக ஊடகங்களில் கண்டனம் கிளம்பியுள்ளது.

 

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ஆர்.பி.எஃப் (ரெயில்வே பாதுகாப்பு படை) விசாரணையை தொடங்கி உள்ளது. பிளாட்பாரத்தில் இருந்த சிலர் கூறியதாவது, “இந்த இருவரின் அலட்சியமான செயலால் அந்த நேரத்தில் ரயில் வந்து நின்றிருக்குமானால், பெரும் விபத்து நடந்திருக்க வாய்ப்புகள் இருந்தன. வெறிச்சோடிருந்த அந்த பகுதியில் ரயில் இல்லாதது ஒரு அதிர்ஷ்டமாகும். இல்லையெனில் பயணிகளின் உயிருக்கு பெரிய ஆபத்து ஏற்படுமாயிருந்தது” என்றனர்.

தற்காலிகமாக பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை ரெயில்வே அதிகாரிகள் தீவிரமாக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? அனுமதி இல்லாமல் இந்த இளைஞர்கள் எப்படி உள்ளே நுழைந்தனர்? ரெயில்வே காவல்துறை எங்கு தவறியது? என்ற கேள்விகள் தற்போது பாதுகாப்பு அமைப்பைச் சுற்றி கிளம்பி வருகின்றன.

இதேவேளை, சம்பந்தப்பட்ட இருவரையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு முறைகளை மேலும் வலுப்படுத்தும் திட்டம் வகுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.