கர்நாடகத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, குழந்தைகளிடம் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மே 26 அன்று முதல்வர் சித்தராமையாவின் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன்படி, மாநில சுகாதாரத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளி மாணவர்கள் எந்தவொரு கோவிட் தொடர்பான அறிகுறிகளுடன் வந்தால் உடனடியாக பெற்றோரிடம் தகவல் தெரிவித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால், அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். முழுமையாக குணமடைந்த பிறகு மட்டுமே பள்ளிக்கு திரும்ப அனுமதி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கர்நாடக மாநிலத்தில் 234 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.