புகழ்பெற்ற அமெரிக்கா ஆய்வு நிறுவனமான பாஸ்ட்ன் கன்சல்டிங் குரூப் தற்போது சர்வதேச புலம்பெயர்வுகளின் போக்குகள் என்ற பெயரில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு 188 நாடுகளில் உள்ள 1.5 லட்சம் ஊழியர்களிடம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின் படி வெளிநாட்டுக்கு சென்று பணி புரிவதில் இந்தியர்களின் ஆர்வம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டுக்கு சென்று பணிபுரிய 2018-ல் 78 சதவீதம் இந்தியர்கள் விருப்பம் தெரிவித்த நிலையில், கடந்த வருடம் அது 54 சதவீதமாக சரிந்துள்ளது.

இதில் 59% பேர் தாய் நாட்டின் மீதான பற்றின் காரணமாக வெளிநாட்டுக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில் பொருளாதார ரீதியான காரணத்திற்காக வெளிநாட்டுக்கு சென்று பணிபுரிய விரும்புவதாக 64 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மேலும் வெளிநாடு செல்பவர்கள் விரும்பும் நாடுகள் பட்டியலையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், அமெரிக்கா 2-ம் இடத்திலும், கனடா 3-ம் இடத்திலும், பிரிட்டன் 4-ம் இடத்திலும், ஜெர்மனி 5-ம் இடத்திலும், ஜப்பான் 6-ம் இடத்திலும் இருக்கிறது. மேலும் இந்த பட்டியலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 54 வது இடத்தில் இருந்த இந்தியா கடந்த வருடம் 48-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.