சத்தீஸ்கர் மாநிலத்தின் ராமானுஜ்கஞ்ச் பகுதியில், ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் மனைவி, அரசு வாகனத்தை பயன்படுத்தி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், அரசு வாகனத்தின் பின்புறம் சைரன்  விளக்குடன் பலூன்கள், பூக்கள், கேக் உள்ளிட்டவை அலங்கரிக்கப்பட்டு, அந்தப் பெண் அதில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருப்பது தெளிவாகக் காணப்படுகிறது.

இச்சம்பவம் சத்தீஸ்கர் ஆயுதப்படையின் 12வது பட்டாலியனில் பணியாற்றும் டிஎஸ்பி தஸ்லிம் ஆரிஃப்பின் மனைவி தொடர்புடையதாக தகவல்கள் கூறுகின்றன. இவர் தனது கணவர் பணியாற்றும் ராமானுஜ்கஞ்ச் நகரில், தனிப்பட்ட பிறந்தநாள் விழாவை அரசுக்கு சொந்தமான  வாகனத்தில் நடத்தி கொண்டாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வீடியோ வெளியான பிறகு, பொதுமக்களிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. “ஒரு அரசாங்க அதிகாரியின் குடும்பத்தினர், அரசு சொத்துகளை தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவது முறையா?” என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் கிளம்பியுள்ளன. இது போலி அதிகாரத்தையும், பொறுப்பில்லா நடத்தையையும் பிரதிபலிக்கிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அல்லது மாநில அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.