மத்திய கிழக்குப் போரின் தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக மூடி முடக்கியது. உலகளவில் இதனால் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவான நிலையில், அமெரிக்க ராணுவம் மிக ரகசியமான முறையில் ஒரு மாபெரும் ஆபரேஷனை நடத்தி முடித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்பொழுது அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த போருக்குப் பிறகு, ஈரானின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நீரிணை வழியாக சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெய்யை அமெரிக்கப் படைகள் ரகசியமாகக் கடத்தி சர்வதேச திறந்த சந்தைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆபரேஷனின் பின்னணியில் இருந்த அதிரடி உத்திகள் குறித்துத் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் ஈரானின் ரேடார் கண்காணிப்புத் திறன்களை அமெரிக்கப் படைகள் முழுமையாகச் செயலிழக்கச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதனைப் பயன்படுத்தி, சுமார் 22 வணிகக் கப்பல்களை அவற்றின் விளக்குகள் அனைத்தையும் அணைத்தும், இருப்பிடத்தைக் காட்டும் டிரான்ஸ்பாண்டர்களை முற்றிலும் முடக்கியும் ஈரானிடம் சிக்காமல் நள்ளிரவில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடியான மற்றும் ஆபத்தான உத்தியின் காரணமாக மட்டுமே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 250 டாலரைத் தாண்டாமல், 90 டாலருக்கும் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளது தற்பொழுது சர்வதேச அளவில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது