பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ஆதேஷ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து, சமூக ஊடகங்களில் பிரபலமாக இருந்த பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர் லூதியானா லக்ஷ்மண் நகர் பகுதியைச் சேர்ந்த கமல் கவுர், சமூக ஊடகங்களில் ‘காஞ்சன்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்தவர். இன்ஸ்டாகிராமில் 3.86 லட்சம் பின்தொடர்பவர்கள் கொண்ட இவர், சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாசமான ரீல்கள் அதிகமாக பகிர்ந்ததற்காக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டவராக இருந்துள்ளார். சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட கார் கமல் கவுருக்கே சொந்தமானது என்றும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், 7 மாதங்களுக்கு முன்பு, பயங்கரவாதி அர்ஷ் டல்லா, கமல் கவுர் பகிர்ந்த ஆபாச உள்ளடக்கம் காரணமாக அவரைக் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் வெளியே வந்துள்ளதால், இந்த மரணம்  விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களில் செயல்படும் பிரபலங்களின் பாதுகாப்பு குறித்து இந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.