சேலம் மாவட்டம் ஆத்தூர் கடைவீதியில் உள்ள நகைக்கடையில், வாடிக்கையாளர்கள் போல வந்த இருவர் ஆசிட் வீசி, துப்பாக்கியால் மிரட்டி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்தூரைச் சேர்ந்த வைதீஸ்வரன் நடத்தும் நகைக்கடையில், ஆகஸ்ட் 6-ஆம் தேதி இரவு கடை அடைக்கத் தயாராக இருந்தபோது, இருவர் நகை பார்ப்பது போல நடித்து உள்ளே நுழைந்தனர். திடீரென அவர்களில் ஒருவன் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து, வைதீஸ்வரன், அவரது மனைவி செல்வ லட்சுமி மற்றும் ஊழியர் வசந்தி மீது வீசியதில், அவர்கள் கடுமையாக காயமடைந்தனர். அதற்கிடையில், கொள்ளையர்கள் கடையில் இருந்த 80 பவுன் நகைகளை எடுக்க முயன்றனர்.

ஆனால், கடுமையான காயங்களுடன் இருந்தும் வைதீஸ்வரன் தைரியமாக எதிர்த்து, நகைகளை பிடுங்க விடாமல் தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், கையில் இருந்த ரிவால்வர் காட்டி மிரட்டினர். அதிலும் அஞ்சாத வைதீஸ்வரன் ஒருவரை மடக்கிப் பிடித்தார். மற்றொருவர் நகைகளுடன் தப்பிச் செல்ல முயன்றபோது, பொதுமக்கள் அவனைத் துரத்தி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பிடித்தனர். தப்பிச் செல்லும் போது, அவர் துப்பாக்கியால் மிரட்ட முயன்றபோதும், மக்கள் தைரியமாக அவரை கட்டுப்படுத்தினர்.

“>

 

பின்னர், இருவரும் ஆத்தூர் நகர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கொள்ளையர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. காயமடைந்த வைதீஸ்வரன் மற்றும் அவரது மனைவி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர் வசந்திக்கு லேசான காயம் ஏற்பட்டதால், முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.