
திண்டுக்கல் மாவட்டம் பழநி தெற்குவீதியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சுகுமாருக்கு நாராயணசாமி (44), துர்க்கைராஜ் (45) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். சில நாட்களுக்கு முன்பு நாராயணசாமியின் வீட்டில் சுகுமார், துர்க்கைராஜ், நாராயணசாமி மற்றும் ராணி சித்ரா (40) ஆகியோர் சேர்ந்து மது அருந்தியதாக தெரிய வந்தது.
இதற்குப் பிறகு, நாராயணசாமி மற்றும் துர்க்கைராஜ் இருவரும் சுகுமாருக்கு தொடர்பு கொண்டு, “ராணி சித்ராவுடன் மது அருந்திய வீடியோ எங்களிடம் உள்ளது. ரூ.10 லட்சம் தராவிட்டால், அந்த வீடியோவை உன் குடும்பத்திற்கும் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு அவமானப்படுத்துவோம்” என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சுகுமார், பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், நாராயணசாமி மற்றும் துர்க்கைராஜ் ஆகியோர் பணக்காரர்கள், பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை குறிவைத்து ராணி சித்ராவுடன் பழக வைத்து, பின்னர் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்தனர். கைதான ராணி சித்ரா, முன்னாள் பெண் போலீசாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.
மேலும், ராணி சித்ராவின் கைபேசியில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் கைபேசி எண்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இது போலவே பணம் பறிகொடுத்திருக்கக் கூடியவர்கள் இருப்பதற்கான சந்தேகம் எழுந்துள்ளதால், போலீசார் ரகசிய விசாரணை மூலம் இந்த கும்பலின் பின்னணியை சீராகத் தோண்டி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.