தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(15). இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல பள்ளிக்கு சென்ற முத்துகிருஷ்ணன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என தலைமை ஆசிரியர் முத்துக்கிருஷ்ணனை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற முத்து கிருஷ்ணன் ஆசிரியர் திட்டியதை நினைத்து மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்பு இரவு வீட்டுக்கு பின்புறம் உள்ள ஆஸ்பெட்டாஸ் கூறையில் தற்கொலை செய்து கொண்டார். மகனின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் அணிந்திருந்த சட்டையில் ஒரு கடிதத்தை போலீசார் கண்டெடுத்தனர்.

அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் கடிதத்தை பிரித்துப் பார்த்தபோது அதில் மாணவன் தன் சாவுக்கு பள்ளியில் வேலை பார்க்கும் வளர்மதி, பியூலா, மேரி மற்றும் தலைமை ஆசிரியர் சத்யா ஆகிய 4 ஆசிரியர்கள் தான் காரணம் என எழுதியுள்ளார். இதனால் மாவட்ட கல்வி அலுவலர் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பின்பு தலைமை ஆசிரியர் சத்யா உட்பட நான்கு ஆசிரியர்களையும் மாவட்ட கல்வி அலுவலர் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.