ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரின் தாக்குதலால் கடைக்காரர் ஒருவர் மயங்கி விழுந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. கடந்த மே 29ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது. இதில், சாலையின் நடுவில் போலீசார் கடைக்காரரை தாக்கும் காட்சியும், அவர் மயங்கி விழும் தருணமும் தெளிவாக காணப்படுகிறது.

அந்த பகுதியில் உள்ள ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) புஷ்பேந்திர பன்சிவால் என்பவர், கடையில் வேலை செய்யும் ரிஸ்வான் என்ற நபரிடம் அவரது கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை நகர்த்துமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் பைக்கில் பூட்டு இருந்ததால் நகர்த்த முடியாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை காரணமாகக் கொண்டு, அதிகாரி ரிஸ்வானை திட்டியதோடு மட்டுமல்லாமல், அவரை நடுரோட்டில் தாக்கியும் உள்ளார்.

இந்த தாக்குதலுக்கு எதிராக ரிஸ்வான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகியதும், அதிகாரியின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. “ஒரு தவறான வாகன நிறுத்தத்திற்காக ஒரு போலீஸ்காரர் இப்படியாக ஒரு சாதாரண நபரை தாக்குவது எந்த சட்டத்தின் கீழ்?” என வினவியுள்ளார் ஒரு பயனர்.

அத்துடன், “@KotaPolice அதிகாரியை நடவடிக்கையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” எனவும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்துள்ளன. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாவதால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது எதிர்பார்க்கப்படுகிறது.